Wednesday, January 21, 2009
இலங்கை தமிழர் விவகாரத்தில் இனியும் தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் கவர்னர் பேசினார். தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் இன்று துவங்கியது. காலை 9.30 மணிக்கு துவங்கிய கூட்டத்தில் கவர்னர் பர்னாலா பேசினார். இலங்கை தமிழர் விவகாரம் குறித்து அவர் பேசியதாவது : இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு தமிழர்கள் பசி பட்டினியால் வாடுகின்றனர். அவர்களுக்கு தேவையான நிவார ணப் பொருள்களை அனுப்ப, மத்திய அரசின் ஒப்புதலை பெற்று, இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்கு என ரூ. 48 கோடி நிதி திரட்டி , உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருள்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் அவர்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்கள் சொந்த மண்ணில் வாழும் சுதந்திரமின்றி, உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்றி இருக்கிறார்கள். அங்கு நடைபெறும் போர், இலங்கை பிரச்னையை தீர்க்க உதவாது என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. பேச்சு வார்த்தை போன்ற உரிய வழிமுறை வாயிலாக, அந்த நாட்டில் அமைதி ஏற்படுவதற்கான முயற்சிகளை இனியும் காலம் கடத்தாமல் மேற்கொள்ள வேண்டும் . இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்று அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்தவாறு இந்த அரசு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் பேசினார். கவர்னர் உரையை தொடர்ந்து இன்றைய சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது . அதன் பின்னர் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய சபாநாயகர் ஆவுடையப்பன் , வருகிற 30ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment